இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 50வது அதிகாரமான இடனறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.
இடனறிதல் என்பதற்குப் பொருள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து செயல்படுவதாகும். செயல்களில் வெற்றி அடைவதற்கும், எதிரிகளைத் தோல்வி அடையச் செய்வதற்கும் ஏற்ற இடத்தை அறிந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
இடனறிதல் – 1
- முதல் குறள்.
“தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.“
இதில்
‘தொடங்கற்க எவ்வினையும்’
இதன் பொருள்
எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம்.
அடுத்து
‘எள்ளற்க‘
இதன் பொருள்
பகைவரை இகழவும் வேண்டாம்.
அடுத்து
‘முற்றும் இடங்கண்ட பின்அல் லது‘
இதன் பொருள்
பகைவரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல்.
அதாவது
பகைவரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எந்தச் செயலையும் தொடங்க வேண்டாம். பகைவரை இகழவும் வேண்டாம்.
இடனறிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்.”
இதில்
‘முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்‘
இதன் பொருள்
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கு.
அடுத்து
‘அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்‘
இதன் பொருள்
அரணோடு சேர்ந்த வெற்றி பற்பல பயன்களைக் கொடுக்கும்.
அதாவது
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கு அரணோடு சேர்ந்த வெற்றி பற்பல பயன்களைக் கொடுக்கும்.
இடனறிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.’
இதில்
‘ஆற்றாரும் ஆற்றி அடுப‘
இதன் பொருள்
வலிமை இல்லாதவர்களும் வலிமை உடையவராகி வெல்லுவர்.
அடுத்து
‘இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்‘
இதன் பொருள்
தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக்கொண்டு எதிரிகளுடன் மோதினால்.
அதாவது
தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக்கொண்டு எதிரிகளுடன் மோதினால் வலிமை இல்லாதவர்களும் வலிமை உடையவராகி வெல்லுவர்.
இடனறிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.”
இதில்
‘எண்ணியார் எண்ணம் இழப்பர்‘
இதன் பொருள்
அவரை வெல்ல எண்ணிய பகைவர் அவ்வெண்ணத்தை இழப்பர்.
அடுத்து
‘இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்‘
இதன் பொருள்
ஏற்ற இடத்தினை அறிந்து பொருந்தி நின்று செயலைச் செய்வார் என்றால்.
அதாவது
ஏற்ற இடத்தினை அறிந்து பொருந்தி நின்று செயலைச் செய்வார் என்றால் அவரை வெல்ல எண்ணிய பகைவர் அவ்வெண்ணத்தை இழப்பர்.
இடனறிதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.”
இதில்
‘நெடும்புனலுள் வெல்லும் முதலை’
இதன் பொருள்
ஆழமுள்ள நீரில் வாழும் முதலை நீரீல் வாழும் மற்ற உயிர்களை வென்றுவிடும்.
அடுத்து
‘அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற’
இதன் பொருள்
ஆனால் அந்த நீரை விட்டு வெளியில் வந்தால் மற்ற உயிர்கள் முதலையை வென்றுவிடும்.
அதாவது
ஆழமுள்ள நீரில் வாழும் முதலை நீரீல் வாழும் மற்ற உயிர்களை வென்றுவிடும். ஆனால் அந்த நீரை விட்டு வெளியில் வந்தால் மற்ற உயிர்கள் முதலையை வென்றுவிடும்.
இடனறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரப்போம்.
நன்றி! வணக்கம்!



