நீத்தார் பெருமை-2

வணக்கம். போன பகுதியில் நீத்தார் பெருமை அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களப் பார்த்தோம். மன ஒழுக்கத்தோடு வாழ்ந்து மறைந்தவர்களின் பெருமையை இந்த அதிகாரம் எடுத்துச் சொல்கிறது. நீத்தார் பெருமை-2ஆம் பகுதியில் உள்ள அடுத்த ஐந்து குறள்களைப் பார்ப்போம்.

நீத்தார் பெருமை-2

  • ஆறாவது குறள்

செயற்கரிய செய்வார் பெரியர்
சிறியர்செயற்கரிய செய்கலா தார்.

இதில்
“செயற்கரிய செய்வார் பெரியர்”
இதன் பொருள்: பிறர் செய்வதற்கு முடியாத அரிய பெருமை தரும் செயல்களைச் செய்ய வல்லவர்களே பெரியோர்கள்.
அடுத்ததாக
“சிறியர் செயற்கரிய செய்கலா தார்”
இதன் பொருள்: அரிய பெருமைக்குரிய செயல்களைத் தவிர்த்து எளிய செயல்களைச் செய்வோர் சிறியவர்கள் ஆவார்.

அதாவது

பிறர் செய்வதற்கு மு.டியாத அரிய பெருமை தரும் செயல்களைச் செய்ய வல்லவர்களே பெரியோர்கள். அரிய பெருமைக்குரிய செயல்களைத் தவிர்த்து எளிய செயல்களைச் செய்வோர் சிறியவர்கள் ஆவார்.

இது இந்த அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள்.

  • ஏழாவது குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

இதில்
“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகை”
இதன் பொருள்: சுவை ஓளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐம்புலன்களிலிருந்து உண்டாகும் ஆசைகளை

அடுத்ததாக
“தெரிவான் கட்டே உலகு”
இதன் பொருள்: அறிவால் துறந்து பற்று விட்டவர்களை இந்த உலகம் போற்றும்..
இதில் ஊறு என்றால் தொடு உணர்வு.

அதாவது
சுவை ஓளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐம்புலன்களிலிருந்து உண்டாகும் ஆசைகளை, அறிவால் துறந்து பற்று விட்டவர்களை இந்த உலகம் போற்றும்.

இது இந்த அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள்.

  • எட்டாவது குறள்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

இதில்
“நிறைமொழி மாந்தர் பெருமை”
இதன் பொருள்: பயன் நிறைந்த மொழி உடைய துறந்தாரின் பெருமையை
அடுத்ததாக
“நிலத்து மறைமொழி காட்டி விடும்”
இதன் பொருள்: இந்த உலகத்தில் அழியாமல் நிற்கும் அவர்கள் விட்டுச் சென்ற மந்திரங்களே காட்டி விடும்.

அதாவது
பயன் நிறைந்த மொழி உடைய துறந்தாரின் பெருமையை, இந்த உலகத்தில் அழியாமல் நிற்கும் அவர்கள் விட்டுச் சென்ற மந்திரங்களே காட்டி விடும்.

இந்த அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்

குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

இதில்
“குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி”
இதன் பொருள்: துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை போன்ற நற்குணங்களால் ஆன குன்றுகள் மேல் நின்ற பெரியோர்களின் சினம்
அடுத்த வரி
“கணமேயும் காத்தல் அரிது”
இதன் பொருள்: ஒரு கணமாயிருந்தாலும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிது.

அதாவது
துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை போன்ற நற்குணங்களால் ஆன குன்றுகள் மேல் நின்ற பெரியோர்களின் சினம், ஒரு கணமாயிருந்தாலும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிது.

இது இந்த அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

இதில்
“மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்”
இதன் பொருள்: எல்லா உயிர்களிடத்திலும் மென்மை, இரக்கம் கொண்டு வாழ்பவரே
அடுத்ததாக
“அந்தணர் என்போர் அறவோர்”
இதன் பொருள்: அவரே அந்தணர் ஆவார்.
இதில் செந்தண்மை என்ற சொல்லுக்கு எளிமை, சாந்தம், மென்மை, கருணை என்று பொருள் சொல்லலாம்.

அதாவது
எல்லா உயிர்களிடத்திலும் மென்மை, இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர். அவரே அந்தணர் ஆவார்.

இது இந்த அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள்.

நீத்தார் பெருமை-2ஆம் பகுதியுடன் இந்த அதிகாரம் முடிந்தது. அடுத்து பகுதியில் 4வது அதிகாரமான அறன் வலியுறுத்தலில் உள்ள குறள்களை பார்க்ப்போறோம். மறக்காமல் வந்து கேளுங்கள்.

நன்றி! வணக்கம்!

திருக்குறளின் மற்ற அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்:

திருக்குறள்: நீத்தார் பெருமை 1

நீத்தார் பெருமை-2
Speaker: Nila

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts