திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
இன்னா செய்யாமை 1
- முதல் குறள்.
“சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்“.
இதில்
‘சிறப்பீனும் செல்வம் பெறினும்‘
இதன் பொருள்
சிறப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்
அடுத்து
‘பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்’
இதன் பொருள்
பிறர்க்குத் துன்பம் செய்யாமலிருப்பதே மாசற்றவரின் கொள்கை ஆகும்.
அதாவது
சிறப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமலிருப்பதே மாசற்றவரின் கொள்கை ஆகும்.
இன்னா செய்யாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்“.
இதில்
‘கறுத்தின்னா செய்தவக் கண்ணும்‘
இதன் பொருள்
தன்மேல் கோபம் கொண்டு ஒருவன் தீமை செய்தாலும்.
அடுத்து
‘மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்‘
இதன் பொருள்
திரும்ப அவனுக்குத் தீமை செய்யாமல் இருப்பது மாசற்றவரின் கொள்கையாகும்.
அதாவது
தன்மேல் கோபம் கொண்டு ஒருவன் தீமை செய்தாலும் திரும்ப அவனுக்குத் தீமை செய்யாமல் இருப்பது மாசற்றவரின் கொள்கையாகும்.
இன்னா செய்யாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்“.
இதில்
‘செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்‘
இதன் பொருள்
தான் ஒரு தீமையும் செய்யாதிருந்து தனக்கு மற்றவர் துன்பம் தரும் போது, அவர் மேல் கோபம் கொண்டு தீமை செய்தால்.
அடுத்து
‘உய்யா விழுமந் தரும்’
இதன் பொருள்
அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத் தரும்.
அதாவது
தான் ஒரு தீமையும் செய்யாதிருந்து தனக்கு மற்றவர் துன்பம் தரும் போது, அவர் மேல் கோபம் கொண்டு தீமை செய்தால், அச்செயல் அவனுக்கு தப்ப முடியாத துன்பத்தைத் தரும்.
இன்னா செய்யாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்“.
இதில்
‘இன்னாசெய் தாரை ஒறுத்தல்‘
இதன் பொருள்
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல் என்பது.
அடுத்து
‘அவர்நாண நன்னயஞ் செய்து விடல்‘
அவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்து அவர் செய்த நன்மை, தீமை இரண்டையும் மறந்து விடுவதாகும்.
அதாவது
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல் என்பது, அவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்து அவர் செய்த நன்மை, தீமை இரண்டையும் மறந்து விடுவதாகும்.
இன்னா செய்யாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை“.
இதில்
‘அறிவினான் ஆகுவ துண்டோ‘
இதன் பொருள்
பெற்ற அறிவினால் ஆகும் பயன் உண்டோ?
அடுத்து
‘பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை‘
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தினைத் தனக்கு வந்தது போல் எண்ணிக் காப்பாற்றாவிட்டால்.
அதாவது
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தினைத் தனக்கு வந்தது போல் எண்ணிக் காப்பாற்றாவிட்டால், பெற்ற அறிவினால் ஆகும் பயன் உண்டோ?
இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது. இந்த அதிகாரத்தின் அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!