இதுவரை திருக்குறளின் முப்பது அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் முப்பத்தொன்றாவது அதிகாரமான வெகுளாமை.
வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.
சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
வெகுளாமை 1
- முதல் குறள்.
“செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்“.
இதில்
‘செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்‘
இதன் விளக்கம்
தன் கோபம் எங்குப் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாமல் இருப்பவனே உண்மையாகக் கோபம் கொள்ளாதவன்.
அடுத்து
‘அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்‘
இதன் விளக்கம்
பலிக்காத இடத்தில் கோபம் வராமல் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
அதாவது
தன் கோபம் எங்குப் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாமல் இருப்பவனே, உண்மையாகக் கோபம் கொள்ளாதவன். பலிக்காத இடத்தில் கோபம் வராமல் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
வெகுளாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற“.
இதில்
‘செல்லா இடத்துச் சினந்தீது‘
இதன் விளக்கம்
பலிக்காத இடத்தில் உண்டாகும் கோபம் தீமையில் முடியும்.
அடுத்து
‘செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற’
இதன் விளக்கம்
பலிக்கும் இடத்தில் உண்டாகும் கோபம் அதைவிடத் தீமையானதாகும்.
அதாவது
பலிக்காத இடத்தில் உண்டாகும் கோபம் தீமையில் முடியும். பலிக்கும் இடத்தில் உண்டாகும் கோபம் அதைவிடத் தீமையானதாகும்.
வெகுளாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்“.
இதில்
‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும்‘
இதன் விளக்கம்
யாரிடத்திலும் கோபம் கொள்ளாமல் அதை மறந்து விடவேண்டும்.
அடுத்து
‘தீய பிறத்தல் அதனான் வரும்‘
இதன் விளக்கம்
ஒருவனுக்குத் தீமைகள் எல்லாம் அந்த கோபத்தாலே உண்டாகும்.
அதாவது
யாரிடத்திலும் கோபம் கொள்ளாமல் அதை மறந்து விடவேண்டும். ஒருவனுக்குத் தீமைகள் எல்லாம் அந்த கோபத்தாலே உண்டாகும்.
வெகுளாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற”.
இதில்
‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்‘
இதன் விளக்கம்
முகத்தில் தோன்றும் மலர்ச்சியான நகைப்பையும் மனதில் தோன்றும் மகிழ்ச்சியையும் கொன்று விடும் கோபத்தை விட
அடுத்து
‘பகையும் உளவோ பிற’
இதன் விளக்கம்
வேறு பகையும் உண்டோ?
அதாவது
முகத்தில் தோன்றும் மலர்ச்சியான நகைப்பையும் மனதில் தோன்றும் மகிழ்ச்சியையும் கொன்று விடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
வெகுளாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்“.
இதில்
‘தன்னைத்தான் காக்கின் சினங்காக்க‘
இதன் விளக்கம்
ஒருவன் தனக்குத் துன்பம் வராமல் காத்துக்கொள்ள விரும்பினால் மனதில் கோபம் வராமல் காத்தல் வேண்டும்.
அடுத்து
‘காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்’
இதன் விளக்கம்
அப்படிக் காக்காவிட்டால் அந்த கோபம் அவனையே அழித்து விடும்.
அதாவது
ஒருவன் தனக்குத் துன்பம் வராமல் காத்துக்கொள்ள விரும்பினால் மனதில் கோபம் வராமல் காத்தல் வேண்டும். அப்படிக் காக்காவிட்டால் அந்த கோபம் அவனையே அழித்து விடும்.
வெகுளாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!