முந்தைய பகுதியில் நிலையாமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நிலையாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகிறீர்கள்.
நிலையாமை என்றால் எதுவும் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்பது உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
நிலையாமை 2
- ஆறாவது குறள்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு“.
இதில்
‘நெருநல் உளனொருவன் இன்றில்லை‘
இதன் பொருள்
நேற்று இருந்தவன் இன்று இல்லை.
அடுத்து
‘என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு‘
இதன் பொருள்
என்று சொல்லப்படும் நிலையாமையாகிய பெருமை உடையது இந்த உலகம்.
அதாவது
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று சொல்லப்படும் நிலையாமையாகிய பெருமை உடையது இந்த உலகம்.
நிலையாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல”.
இதில்
‘ஒருபொழுதும் வாழ்வது அறியார்‘
இதன் பொருள்
ஒரு பொழுதாவது உயிரும் உடம்பும் இணைந்திருந்தாலும் உடம்பின் நிலையற்ற தன்மையை அறியாதவர்.
அடுத்து
‘கருதுப கோடியும் அல்ல பல‘
பல கோடி வீணான எண்ணங்களை நினைக்கின்றனர்.
அதாவது
ஒரு பொழுதாவது உயிரும் உடம்பும் இணைந்திருந்தாலும் உடம்பின் நிலையற்ற தன்மையை அறியாதவர் பல கோடி வீணான எண்ணங்களை நினைக்கின்றனர்.
நிலையாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு”.
இதில்
‘குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே‘
இதன் பொருள்
முட்டை தனித்து இருக்க, அதன் உள்ளே இருந்த பறவை பருவம் வந்த உடன் பறந்து போவது போல் ஆகும்.
அடுத்து
‘உடம்பொடு உயிரிடை நட்பு’
இதன் பொருள்
உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள உறவு.
அதாவது
உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டை தனித்து இருக்க, அதன் உள்ளே இருந்த பறவை பருவம் வந்த உடன் பறந்து போவது போல் ஆகும்.
நிலையாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”.
இதில்
‘உறங்கு வதுபோலுஞ் சாக்காடு‘
இதன் பொருள்
இறப்பு என்பது உறங்குவது போன்றது.
அடுத்து
‘உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’
பிறப்பு என்பது உறக்கம் நீங்கி விழித்து எழுவது போன்றது.
அதாவது
இறப்பு என்பது உறங்குவது போன்றது. பிறப்பு என்பது உறக்கம் நீங்கி விழித்து எழுவது போன்றது.
நிலையாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”.
இதில்
‘புக்கில் அமைந்தின்று கொல்லோ’
இதன் பொருள்
நிலையான இருப்பிடம் இதுவரை அமையவில்லை போலும்.
அடுத்து
‘உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு‘
இதன் பொருள்
நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒதுங்கி இருந்த உயிர்க்கு.
அதாவது
நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒதுங்கி இருந்த உயிர்க்கு நிலையான இருப்பிடம் இதுவரை அமையவில்லை போலும்.
நிலையாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் துறவு.
நன்றி! வணக்கம்!